சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சிவ ஆனந்த். இவரை கடந்த 1ந் தேதி அன்று செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் “நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுபாஷ் பேசுகிறேன்” நூம்பல் பகுதியில் காரில் வந்தபோது அவ்வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் என் கார் மீது மோதிவிட்டது. எனவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து ரோந்து வாகனத்தில் விரைந்து சென்ற போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்து விபத்து ஏற்படுத்திய நபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த “டிப் டாப்” இளைஞர் நான் தான் ஐஏஎஸ் அதிகாரி “சுபாஷ்” உங்கள் இன்ஸ்பெக்டரிடம் எனது விசிட்டிங் கார்டை கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.


அந்த கார்டில் அரசு இணைச் செயலர்(joint Secretary) என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் டிப் டாப் இளைஞர் சுபாஷ் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்தணியை பூர்வீகமாக கொண்டவரான பாலிடெக்னிக் முடித்த சுபாஷ்(27) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்து கைவரிசை காட்டி தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவதால் பெரும்பாலானோர் ஐஏஎஸ் அதிகாரி என நினைத்து ஏமாந்துள்ளனர்.
இதனை அடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இன்று அதிகாலை சுபஷை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 170- அரசு அதிகாரி போல் நடித்தல், 468- பொய்யான ஆவணம் புனைதல், 471-பொய்யான ஆவணங்களை பயன்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுபாஷ் மின்சார வாரியம், மாநகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் ஐ.ஏ.எஸ் என்று அச்சிடப்பட்ட போலியான “விசிட்டிங் கார்டு” கொடுத்தும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியும் அதிகாரிகள் பலருக்கும் மிரட்டல் விடுத்து காரியங்கள் சாதித்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், என்னென்ன மோசடியில் ஈடுபட்டார் எனவும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார், யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறி அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


