புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று(19.02.23) இரவு திட்டமிட்டு, பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப் பட்டன.
ABVP கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு மாணவர் பிரவீன் இதே காவிக் கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார்.
இந்த மாணவர்கள் JNUவில் தொடர்ச்சியாக சமூக நீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள். சமூகநீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள். காட்டாறு குழுவின் “Reservation Rights” இந்தி, ஆங்கில நூல்களை டெல்லியிலுள்ள எல்லா உயர்கல்வி நிறுவனங் களிலும் பரப்புவதில் தீவிரமாக இயங்குபவர்கள்.


பல்கலைக்கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர்நாள், புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து இயங்கியவர்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி.காலிகளுக்கு ஆதரவாகவே இயங்குகிறது.

தமிழ்நாட்டு அரசும், புதுடெல்லியிலுள்ள நமது எம்.பி.களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


