தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் பாஜக நிர்வாகிக்கும், அக்கட்சியில் இருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை ஆதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கும் கை கலப்பாக மாறியது. வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராஜ்குமார் என்பவருக்கும், பாஜகவில் இருந்து விலகி ‘அண்ணாமலை இயக்கம்’ என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டு வரும் செல்வமணி என்பவருக்கும் இடையே ஏற்கனவே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், இன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் நடுரோட்டில் சராமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இருவரின் சட்டைகளும் கிழிந்து, காயம் ஏற்பட்டது. சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த வேளையில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, காயமடைந்த ராஜ்குமார் மற்றும் செல்வமணி ஆகிய இருவரும் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மணிமங்கலம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோதலுக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
