உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி நகரசபை தலைவராக இருந்து வருபவர் சகுந்தலா. முன்னதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். நகரசபை கூட்டத்தை கூட்டரங்கில் நடத்தாமல், அவரது அறையில் வைத்து நடத்தியது, மன்றக் கூட்டங்களின்போது அவரது மகன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவது, மன்றத்தின் அதிகாரத்தை சுயமாக எடுத்து கொண்டு அவரது அதிகார வரம்பினை மீறி தன்னிச்சையாக பணிகளை எடுத்து முன் அனுமதி வழங்கி வருவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது எழுந்தன.
அத்துடன் சகுந்தலா தி.மு.க. சார்பில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவருக்கு நகரசபை தலைவர் பதவி கொடுக்காத காரணத்தால் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக நகரசபை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் அ.தி.மு.க.வில் இணைந்து விட்டார். அதேநேரம் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை தகுதிநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சகுந்தலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நகர் மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் 26.08.2025 அன்று ரத்து செய்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மீண்டும் நகர் மன்ற தலைவியாக பதிவியேற்று மக்கள் பணி செய்ய சகுந்தலா வந்த சூழலில், நகர் மன்ற தலைவர் அறையை பூட்டி வைத்துவிட்டு நகராட்சி ஆணையாளர் வெளியே சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி அவரது அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டடார். இரு தினங்களுக்கு முன்பே நீதிமன்ற உத்தரவை வழங்கிவிட்டு இன்று பதிவியேற்றுக் கொள்ள வர உள்ளதாக கூறி சென்றிருந்த சூழலில், இன்று திடீரென அறையை பூட்டிவிட்டு செல்ல காரணம் என்ன என்றும், பதவியேற்று மக்கள் பணி செய்ய அனுமதி தரும் வரை காத்திருப்பேன் என்றும் கூறி சகுந்தலா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.