அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று அறிவித்துள்ளதால், வரும் டிசம்பருக்குள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சொல்வது சாத்தியமில்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உள்துறை அமைச்சர் அமித்ஷா அழுத்தம் திருத்தமாக 2026-ல் கூட்டணி ஆட்சி என்று கூறியுள்ளார். இது புது சர்ச்சை அல்ல. குழப்பம் தொடர்கிறது என்று சொல்லலாம். அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பின்போது கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொன்னார். எல்லோரும் அப்படிதான் நினைத்துக்கொண்டிருந்தோம். அதை 4 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அப்போது பாஜவினர் மௌனமாக இருந்தனர். அதே காட்சிதானா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இல்லை கூட்டணி ஆட்சியில் எங்களுக்கு பங்கு வேண்டும் என்று கூட நீங்கள் பிரகடனப்படுத்த வேண்டாம். ஆனால் எடப்பாடி பழனிசாமி என்கிற வார்த்தையையே அமித்ஷா சொல்லவில்லையே ஏன்?. அன்றைக்கும் தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என்று அமித்ஷா சொல்லவில்லை. தற்போதாவது அந்த பெயரை சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அமித்ஷா எடப்பாடியின் பெயரையே சொல்லாமல் தவிர்க்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறீர்களே, எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என்கிற வார்த்தை திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறதா? அல்லது உள்ளே வேறு எதாவது திட்டங்கள் இருக்கிறதா? பாஜகவின் கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதையும் நினைக்கத்தான் தோன்றுகிறது.
பாஜக முன்வைத்த நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு வரவில்லை. ஒன்றுபட்ட அதிமுக என்கிற புள்ளிக்கு அவர் வரவில்லை. கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் இடம்பெறுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. அதிமுக – பாஜக விவகாரத்தில் கூட்டணி அரசா? அமைச்சரவையில் பாஜகவுக்கு இடம் உண்டா? அப்படி ஒரு நிபந்தனையை பாஜக முன்வைத்தால் கூட்டணி நீடிக்குமா? என்பது போன்ற சில குழப்பங்கள் உள்ளன. தற்போதே சில வதந்திகள் பரவுகின்றன. அதை திமுக பரப்புகிறதா? என்று தெரியவில்லை. டிசம்பருக்குள் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டு விடுவார். அதற்கு விஜய் காரணமாக சொல்லப்படுகிறார். பாஜக, கிட்டத்தட்ட துப்பாக்கி முனையில் மிரட்டுவது போல எடப்பாடியை மிரட்டி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்கள். எனவே அவ்வளவு சீக்கிரத்தில் பாஜக கூட்டணியை உடைத்துவிட்டு அவர் வெளியே வருவார் என்று நான் நினைக்கவில்லை. அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு பிறகுதான் பாஜக கூட்டணிக்கு வருவேன் என்று எடப்பாடி சொன்னார் என்கிறார்கள். 6 மாதத்திற்கு முன்னதாக இது செய்யப்பட்டிருந்தால் நானும் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மனுத்தாக்கல் தொடங்கி, அந்த வேலைக்காக தான் அமித்ஷா இங்கே வருகிறார். நான் வரும்போது முடியுங்கள் என்று சொல்கிறார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.
ஒருவேளை விஜய், அதிமுக கூட்டணிக்கு வர விரும்பினால், பாஜகவை வெளியேற்றினால் கூட்டணிக்கு தயார் என்று சொல்ல வாய்ப்பு உள்ளது. அப்போதும் கூட தங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றுகிறேன் என்று எடப்பாடி சொல்ல மாட்டார். ஆளைவிட்டு அனுப்பி, அல்லது அவரே திரைமறைவில் சந்திப்புகளை நடத்தி, வரமாட்டார் என எதிர்பார்த்த விஜய் வருகிறார். முதலில் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வோம். மற்றதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். கொஞ்சம் தனித்து நில்லுங்கள் என்று கோரிக்கை வைத்து சில ஏற்பாடுகள் நடைபெறலாம். மற்றொரு புறம் விஜய், தனது வெட்கத்தை தள்ளிவைத்துவிட்டு தானும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்று திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜக இருந்தாலும் பரவாயில்லை. அதிமுகவோடு கூட்டணி வைக்கிறேன் என்று விஜய் வரலாம். மிக நிச்சயமாக அந்த அணி வெற்றிக்கூட்டணியாக மாறினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால் விஜய் என்கிற அந்த பிம்பம், பல முனைகளில் அடிபடும். ஆட்சியில் இருப்பவர்களை எதிர்க்கிறோம் என்றால் அந்த பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எங்களுக்கு எதிரிதான் என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? ஒரு பத்திரிகையாளனாக எதற்கும் சாத்தியம் உள்ளது என்று நம்புகிறவன் நான். ஒரு துண்டை போட்டு வைப்போம். நாளைக்கு ஒரே வேளை அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்துவிட்டால் நாம் போய் சேர்ந்துகொள்ளலாம் என்கிற கணக்குதான். அப்போது ஒரு சராசரி அரசியல்வாதிதான் நீங்கள். உங்களிடம் வெளிப்படைத்தன்மையும் இல்லை. நேர்மையும் இல்லை. திட்டமிட்டு அதிமுக பெயரை சொல்லாமல் விஜய் நழுவுவதை பார்த்தால் அதிமுக – விஜய் கூட்டணி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
அமித்ஷாவின் பேச்சின் மூலம் அவர்கள் தென் தமிழ்நாட்டை குறிவைப்பது தெரிகிறது. அதிமுக செல்வாக்கை இழந்து வரும் நிலையில், அந்த இடத்தை பாஜகவை வைத்து நிரப்ப முயற்சிக்கிறார்கள். இதற்காக முதலில் பதற்றப்பட வேண்டியதும், எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் எடப்பாடி தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில அதிமுக வாக்குகள், அவர்கள் இடம்பெறாத என்டிஏ கூட்டணிக்கு போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் ஓபிஎஸ், தினகரன் தான். இது குறித்து ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டிய கடமை எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எடப்பாடியை, முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் போய் பார்த்தார்களே எதற்காக? அந்த காலி இடத்தை பாஜக நிரப்ப நினைப்பது அவர்கள் பார்வையில் சரியானதுதான். நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவராகிறபோது, அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியான முக்குலத்தோர் வாக்கு வங்கியை எப்படி பலப்படுத்துவது என்றுதான் யோசிக்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 50 இடங்கள் வேண்டும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். அப்படி 50 இடங்களை பெறுகிற அளவுக்கு பாஜக தகுதியான கட்சி என்று யார் முடிவு செய்தார்கள்? அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? அவர்கள் பெற்ற 18 சதவீத வாக்குகளில் யாரெல்லாம் உள்ளனர். ஓபிஎஸ், தினகரன், ஏசிஎஸ், வாசன், பாமக வாக்குகள் அதில் இல்லையா? 18 சதவீத வாக்கு வங்கி என்பது பாஜக தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றுகிற கணக்கு ஆகும். 18 சதவீதம் என்பது பாஜகவின் வாக்கு வங்கி அல்ல. அது தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு வங்கியாகும். பாமகவையும் உள்ளடக்கிய என்டிஏ கூட்டணிக்கு 50 இடங்களை கேட்கிற அதிகாரம் பாஜகவுக்கு யார் கொடுத்தது? பாஜக அணியில் இடம்பெற்றாலும் ராமதாஸ் தங்களுக்கான இடங்களை தாங்களே பெற்றுக் கொள்கிறோம் என்பார். ஒன்றுபட்ட அதிமுக உருவாகாவிட்டால் நிஜமான பலன் களத்தில் எதிரொலிக்காது. தினகரன் இறங்கிவந்து எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார். ஒன்றுபட்ட அதிமுக உருவாகினால்தான் அவர்கள் கால்மேல் கால் போட்டு சீட்டு பேரத்தை நடத்த முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.