திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது ஏன்? நிறம் கருப்பு என்பதாலா? அதிலும் வர்ண பேதமா? எனவே, மாட்டுப் பொங்கலன்று எருமையையும் குளிப்பாட்டி, மாலை அணிவித்து பசு, காளைகளோடு ஊர்வலமிடுவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது – பொங்கல் விழா என்ற அறுவடைத் திருநாள் திராவிடர் திருநாள். பொங்கல் விழாவை தமிழர் திருவிழா என்றாலும், திராவிடர் திருவிழா என்றாலும், ஒன்றேதான்; முரண் அல்ல; சிலரின் குழப்பம் அல்லது குதர்க்கம் தேவையற்றது. தமிழர் – திராவிடர் ஒருவரே! இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் எளிதாகக் குறிப்பிட்டார்.
‘‘‘தமிழர்’ என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்; ‘திராவிடர்’ என்பதால் நான் உரிமை பெறுகிறேன்’’ என்றார்! பண்பாட்டுப் பெருவிழா இத்திருவிழா! ஆரியம் தனது ‘மனுஸ்மிருதியில்‘ வேளாண்மையைக் கேவலப்படுத்துகிறது. ‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்புக் கொழுநுதி உடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியிலுண்டான சிறிய உயிரினங்களையும் வெட்டுகிறதல்லவா?’’ (மனுஸ்மிருதி – அத்தியாம் 10, சுலோகம் 84)
திராவிடப் பண்பாட்டில் இந்த ஆரியப் பண்பாட்டுக்கு எதிராக திருக்குறளில் ‘உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி!’ ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’’ என்று பலபடப் புகழுகின்றனர். அதுமாத்திரமா? ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் ஆரிய மயமானவையே!
இன்று மாதந்தவறாமல் கொண்டாடப்படும் ஹிந்து மதப் பண்டிகைகள் எல்லாம் ஆரிய மயமானவை, மனிதர்களைக் கொல்லுதல், அழித்தல் என்ற கொடுமையையும், அறிவுக்கு ஒவ்வா மூடநம்பிக்கைகளையும் கொண்ட பண்டிகைகள். பொங்கல் ஒன்றுதான் திராவிடப் பண்பாட்டுக்கானது. யாகத்தை வெறுத்த, எதிர்த்த பண்பாடு – திராவிடர் பண்பாடு.
வேளாண்மை – உழவு கலப்பைப்பற்றி கருணையுடன்(?) பொங்கும் மனுவாதிகள், யாகம் என்ற பெயரில் எத்தனைப் பிராணிகளைக் (உயிர்களை) கொன்று பொசுக்கி, அவற்றின் ‘அவிர்ப்பாகங்களை’ உண்ணும் இவர்கள்தான்; கலப்பை மண்ணைக் கீறி பல உயிர்களைக் கொல்கிறது என்று போலிக் காரணம் கூறுகின்றனர் – எவ்வளவு முரண்பாடு முட்டும் வேடிக்கை!
மாட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழ்கிறவர்கள் உழவர்கள்! அதில்கூட பின்னாளில் ஆரிய போதனையால், எருமை மாடு என்ன குற்றம் செய்தது? காளை மாடு, பசு மாடு ஆகியவற்றை மட்டும் மாட்டுப் பொங்கலில் சிறப்புச் செய்து கொண்டாடுவது– எருமை மாடு என்ன குற்றம் செய்தது? வடநாட்டில் இன்றும்கூட பல மாநிலங்களில் எருமை தானே ஏர் பூட்டப்பட்டு உழவுப் பணிக்கு உதவுகின்றது!
மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டுக்கும் சிறப்பு செய்வீர்! பொங்கல் விழாவான திராவிடர் திருவிழாவில் மாட்டுப் பொங்கல் கொண்டாடும்போது, எங்கெங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ, அங்கெல்லாம் எருமைகளையும் குளிப்பாட்டி மாலையிட்டு, காளை, பசுமாட்டின் பக்கத்திலேயே நிறுத்திக் கொண்டாடி, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பணியினைச் சிறப்புடன் நடத்திட முயலுங்கள்!
சிறுசிறு நிகழ்வுகளைக்கூட பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ உரியோர் என்பதற்கு இம்மாதிரி பண்பாட்டுப் புரட்சிகளை மேலும் சிறப்புடன் நடத்தி, வழிகாட்டிட முன்வரவேண்டும்! தைப் பொங்கலைக் கொண்டாடுவோம்! திராவிடர் திருவிழாவாக தைப் பொங்கல் என்ற தமிழர் திருநாளை ஊக்கம் பொங்க, உணர்ச்சி கொப்பளிக்க உலகம் உவக்கக் கொண்டாடி மகிழவேண்டும்! ஆயத்தமாவீர்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளாா்.
‘‘சங்கச் சுரங்கம் இரண்டாம் பத்து அணிநடை எருமை’’ –
எருமைபற்றி ஒடிசா அரசின் மேனாள் மதிஉரைஞர் ,ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். தனது ஆய்வு நூலில், எருமையின் சிறப்புப்பற்றிக் கூறுகின்ற பண்டைய தமிழ் இலக்கியப் பாடல்களை நன்கு விளக்கி எழுதியுள்ளார்.எருமைபற்றி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். கூறுவது பின்வருமாறு – ‘‘சங்கச் சுரங்கம் இரண்டாம் பத்து அணிநடை எருமை’’ பின் ஏன் அதற்கு ஏதும் செய்யாது அரண்? கருப்பு! கருப்பு!! புராணக் கதைப் புளுகுப்படி அது எமன் ஏறும் வாகனமாம்! வர்ண தருமம் அதில்கூட! கருப்பைக் கண்டால் அவ்வளவு எரிச்சல்! திரு.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். திராவிட நாகரிக ஆய்வுப் பெருமகனார். ‘எருமை’ எப்படி நமது பண்டைய இலக்கியங்களில் சிறப்புப் பெற்று, பின்னர் கருப்பு நிற வெறுப்பே முதன்மையாகி உழைக்கும் அதனை ஒதுக்கிவிட்ட கொடுமை அரங்கேற்றப்பட்டதுபற்றி, விளக்கமாக எழுதியுள்ளார்!
‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ இந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி ‘‘Don’t allow it to be cowed down’’ என்ற ஒரு கட்டுரை வெளியானது. இதனை எழுதியவர் 1984 இல் என்னுடன் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த என் நண்பர் தருண் சிறீதர். அவர் இந்தியாவின் ஒன்றிய அரசினுடைய கால்நடை வளர்ப்புத் துறையின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அவர், சரத் குப்தா என்பவருடன் இணைந்து இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார். யாராவது ஒருவர் ஒடுக்குகிறார் என்றால் அவருக்கு எதிராக won’t get cowed down என்று ஆங்கிலத்தில் சொல்வர். அதாவது என்னை ஒடுக்க முடியாது, என்னை நசுக்க முடியாது, என்னுடைய குரல்வளையை நெறிக்க முடியாது, என்னை அமைதிப்படுத்த முடியாது, என்னைப் பணிய வைக்க முடியாது என்பதுபோலப் பயன்படுத்துகின்ற வார்த்தைதான் இந்த ‘‘cowed down.’’ இந்த வார்த்தையை அவர் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
அவருடைய அனுபவமும், புள்ளி விவரங்களும் சார்ந்து அமைந்திருக்கிறது இக்கட்டுரை. உலகின் எருமை மாடுகளில் 97 விழுக்காடு ஆசியாவில் உள்ளதென முன்னமே கண்டோம். பெரும்பாலும் தெற்காசியாவில் உள்ளன. இந்தியாவிற்கு அடுத்து பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்து முதலிய பகுதிகளில் உள்ளன. உலகில் உள்ள மொத்த எருமை மாடுகளில் 56% இந்தியாவில் காணப்படுகின்றன. 2018–2019 ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவின் பால் உற்பத்தியில் 48.9% (2018–2019) எருமைப்பால். மொத்தம் இருக்கக்கூடிய 187.75 மில்லியன் மெட்ரிக் டன்னில் 91.82 மில்லியன் எருமைப்பால், பசு மாட்டுப்பாலில் 51.25 மில்லியன் மெட்ரிக் டன் கலப்பு மாடுகள் அல்லது ‘‘அந்நிய அரிய வகை’’ எனப்படும் சீமைப் பசுமாடுகளின் பால். 38.57 மில்லியன் மெட்ரிக் டன் பால்தான் நாட்டு மாடுகள், அதாவது சுதேசி மாடுகளின் பங்களிப்பு என்று இக்கட்டுரை குறிப்பிடுகிறது.
தருண் சிறீதர், ‘‘இருந்தாலும், அரசு நிர்வாகத்திலும் கொள்கைகளை வடிவமைப்பதிலும் ஏதோ ஒரு வகையில் எருமைகளை விளிம்புநிலைக்குத் தள்ளிவிட்டோம்’’ என்று இக்கட்டுரையில் எழுதுகிறார்.
நாம் வாங்கிக் குடிக்கும் பாக்கெட் பால் என்பது பசும்பாலும் எருமைப்பாலும் சேர்ந்த கலவைதான். பால்மாட்டுக்காரர்களுக்கு தரப்படும் பாலின்விலை என்பது பாலில் உள்ள கொழுப்புச்சத்து விகிதத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. பசு மாட்டுப் பாலின் கொழுப்பு விகிதத்தினைவிட எருமை மாட்டுப் பாலின் கொழுப்பு விகிதம் அதிகமானது. எருமை மாடு தகுதி அடிப்படையிலும், திறன் அடிப்படையிலும் சிறந்தது என தருண் சிறீதர் எழுதுகிறார்.வஞ்சிக்கப்பட்ட எருமைகள் பசு மாடு கொண்டிருக்கும் ‘‘உயர் தகுதி’’ என்பதற்கு மாட்டுப் பண்ணைப் பொருளாதாரம் சார்ந்த ‘மெரிட்’ காரணங்கள் எதுவும் இல்லை. பசு மாட்டிற்கு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று நாம் வரலாற்றுப் பார்வையிலும், சமுதாயப் பார்வையிலும் பார்க்க வேண்டும். எருமை, பசு என்று இரண்டு விலங்குகளும் வரலாறு நெடுகிலும் உள்ளன. எருமை மாடு இந்தியாவிலேயே 5000 ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுவிலங்காக வளர்க்கப்பட்டு, சிந்துவெளியிலிருந்து மெசபடோமியாவிற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
சங்க இலக்கியம் முதல் எல்லா இலக்கியங்களிலும் எருமை மாடு பற்றிய மதிப்பீடுகள் காலம் தோறும் மாறி வந்துள்ளது. கடைசியில் இப்போது நாம் எருமையை எங்கு வைத்துள்ளோம் என்பது முக்கியமானது. தருண் சிறீதர், ‘‘சமய மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்’’ என்று கூறுகிறார்.
பசும்பால் சிறந்தது என்று பிரச்சாரம் செய்யும் யாரும் அதற்கான அறிவியல்சார்ந்த சான்றுகளை அளிப்பதில்லை. உடல் நலத்தில் அக்கறை காட்டும் நகரமக்களாலும் கூட எருமைப்பாலில் குறை காணமுடியாது. சுதேசி, விதேசி (உள்நாடு – வெளிநாடு) காரணங்களையும் சொல்லமுடியாது. ஏனெனில் பால் எருமைகளின் தாயகமே இந்தியாதான். இந்தியாவில் கறவைப் பசுமாடுகளில் சீமைப்பசுக்களும் கலப்புமாடுகளும் நிறைய உள்ளன. எருமை மாடுகளைக் குறைந்த செலவில் பராமரிக்கலாம். வருமானமும் அதிகம். சீமைப்பசுக்களும் ,கலப்புப்பசுக்களும் “அரியவகை” மாடுகள் என்பதால் தீவனமும் கிராக்கியானது.
இந்தியாவிலிருந்து 2018-2019இல் ஏற்றுமதி செய்யப்பட்ட எருமை மாட்டு இறைச்சியின் மதிப்பு ரூ. 25168.31 கோடிகள். இதற்குச் சமயம், பண்பாடு மற்றும் சமூகம்சார்ந்த எந்த தடையும் இல்லை என்பதே இவ்வளவு ஏற்றுமதி செய்வதற்குக் காரணம், அதுமட்டுமின்றி சாலையில் திரியும் அனாதை எருமை என்பது இந்தியாவில் கேள்விப்படாத ஒரு விஷயம். ஆனால் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கேட்பாரற்றுச்சாலையில் திரியும் மாடுகள் 50 இலட்சத்திற்கும் மேல் என்று குறிப்பிடுகின்றனர். ”A2″ சவுண்டுகளையோ சில குறிப்பிட்ட நாட்டுவகை பசுமாட்டு பால் பற்றிய “மர்மமான” சக்தி பற்றியோ வரும் தகவல்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எல்லாப் பாலும் ஒரு பால் தான் என்று தருண் சிறீதர் குறிப்பிடுகிறார்.
அப்படிப் பார்த்தால் குதிரை, கழுதை ஆகியவற்றின் பால்தான் மனிதரின் தாய்ப்பாலுக்கும் மிக நெருக்கமானது. ஆனால் கழுதைப்பால் வியாபாரத்தில் இறங்கி யாரும் வெற்றி பெறவில்லை. பல்வேறு விலங்குகளின் பாலில் பெரிதாகப் போட்டி வைத்துத் தேர்ந்தெடுக்க எதுவும் இல்லை. எல்லாப் பாலிலும் 83% முதல் 91% வரை தண்ணீர்தான். இன்னும் சொல்லப்போனால் எருமைப்பால் எத்தனையோ வகைகளில் சிறப்பானது. குறைந்த தண்ணீர், நிறைய திடம் (more solids content) கொண்டது. பசும்பாலில் செய்யும் எல்லாப் பால்படு பொருட்களையும் பலகாரங்களையும் எருமைப்பாலில் செய்யலாம். ஆனால்,நமது பால் மற்றும் கால்நடை சார்ந்த கொள்கையில் மிகவும் சிறிய இடத்தினையே எருமை மாடு கொண்டிருக்கிறது என்று முடிக்கிறார் தருண் சிறீதர்.
தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம் – வைகோ பொங்கல் வாழ்த்து