பாஜக முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம் அவர்களின் கடவுளான ராமரை கைவிட்டுள்ளனர் என்று அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டில், விரதம் இருந்து பங்கேற்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கும், முருகனுக்கும் என்ன தொடர்பு உள்ளது? முருகன் வேதங்களில் சொல்லப்படாத கடவுளாகும். சனாதனத்திற்கும், முருகனுக்கும் என்ன தொடர்பு உள்ளது. பாஜகவுக்கு தைரியம் இருந்தால் ராமருக்கு மாநாடு நடத்த வேண்டும். எதற்காக முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டும். ஏனென்றால் இங்கு வந்தால் திராவிட கடவுள்களை தான் கும்பிட்டாக வேண்டும். நீங்கள் உங்கள் கடவுளை கைவிட்டு விட்டீர்கள். மத்திய அமைச்சர் எல்.முருகன் வேல் யாத்திரை சென்றபோதே சொன்னேன். உங்கள் கடவுள் ராமர்.. நீங்கள் ஏன் வேல் யாத்திரை நடத்துகிறீர்கள் என்றேன். வேதங்களில் சொல்லப்படாத கடவுளுக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம். திருத்தணி தாண்டினால் முருகனுக்கு கோவில் கிடையாது.
தமிழ்நாட்டிற்கு வந்தால் முருகனை, சிவனை தான் கும்பிட்டாக வேண்டும். தமிழ்நாட்டில் திராவிடம் தான் பேசியாக வேண்டும். அமித்ஷாவாக இருந்தாலும், எனக்கு தமிழ் தெரியவில்லை என்று பேசித் தான் ஆக வேண்டும். அதனால் தான் திராவிட இயக்கம் வலிமையாக நிற்கிறது. தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு இடம் கிடையாது. சும்மா பாஜகவும் ஒரு கட்சியை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு இந்துக்கள் ஒற்றுமையாக வர வேண்டும் என்று அமித்ஷா சொல்கிறார். இவர்கள் சங்கராச்சாரியாரிடமே சூத்திரன் என்று கீழே உட்காரும் நபர்கள். நீங்கள் நடத்துகிற மாநாட்டிற்கு நான் வந்தால் எனக்கு என்ன மரியாதை இருக்கும்.
திருப்பரங்குன்றம் மலையை மீட்க வேண்டும் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். கட்சியில் ஒருவர், இருவர் மெண்டலாக இருக்கலாம். கட்சி முழுவதும் அப்படி இருந்தால் என்ன சொல்வது. மாலிக் கபூர் வந்தபோது மாறிய இடம் அது. திருப்பரங்குன்றம் மலையில் அடிவாரத்தில் முருகன் கோவில் உள்ளது. சிவன் கோவிலும் உள்ளது. மேலே மசூதி உள்ளது. இதற்கு முன்னதாக அந்த மசூதியை எடுத்தார்கள். அப்போது திருப்பரங்குன்றம் மக்களே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் ஓடி விட்டனர். தற்போது மீண்டும் எடுக்க பார்க்கிறார்கள். பகல்காம் தாக்குதலுக்கு முன்னதாக இதைதான் கையில் எடுத்து மதக்கலவரம் செய்ய பார்த்தார்கள். தற்போது மீண்டும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள்.
திமுக அந்த தர்காவை வைத்தது என்று பாஜகவினர் சொல்கிறார்கள். அப்போது 1949ஆம் ஆண்டில் தான் அந்த தர்கா உருவானதா? அப்போது தர்காவை தொடங்கினால் மதுரை மக்கள் சும்மா விட்டிருப்பார்களா? கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய பின்னர் துலுக்க நாச்சியார் வீட்டிற்கு செல்வார். துலுக்க நாச்சியார் என்பது ஒரு இஸ்லாமியர் இல்லமாகும். அங்குதான் கள்ளழகர் செல்வார். அதையும் நயினார் நாகேந்திரன் சொல்ல வேண்டும். பாஜக முருகனுக்கு விழா எடுப்பது என்பது, திராவிட இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தைரியம் இருந்திருந்தால் ராமர் மாநாடு நடத்தியிருக்க வேண்டும். முதலில் தமிழ்நாட்டில் ராமருக்கு தனிக் கோவில் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள். அதற்கு பிறகு பார்க்கலாம்.
பாஜக இஸ்லாமியர்களை எதிரிகளாக கட்டமைத்து, இந்துக்களின் வாக்குகளை பெற முயற்சிப்பார்கள். இது வடமாநிலங்களிலேயே எடுபடவில்லை. அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்துதான் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். வாக்கு இயந்திர மோசடியை நிறுத்திவிட்டு நேருக்கு நேர் வாங்க என்று தான் நாம் சொல்கிறோம். கருத்துக்கணிப்புகள் எதுவும் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. அதனால் தான் தற்போது கருத்துக்கணிப்புகளை தங்களுக்கு ஆதரவாக மாற்றத் தொடங்கி விட்டார்கள். சி-ஓட்டர், இந்தியா டுடே போன்றவர்களை வைத்து மாற்றுகிறார்கள். வாக்கு எந்திரமும் கடந்த தேர்தலில் காலை வாரிவிட்டது. அதனால்தான் மைனாரிட்டி அரசானது. சந்திரபாபு நாயுடுவும், நிதிஷும் இல்லா விட்டால் மோடி ஆட்சி நடத்த முடியாது.
2026 தேர்தலை மையப்படுத்தி தான் முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். பாஜகவினரின் முருக பக்தி என்பது அவர்கள் நடத்துகிற மாநாட்டிலேயே வெட்ட வெளிச்சமாகிவிடும். திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக தான் பாஜக இவ்வளவும் செய்கிறார்கள். ஆனால் திமுக அதை சட்டை செய்யவில்லை. விஜய் கட்சியில் நாள்தோறும் 15 ஆயிரம் பேர் இணைவதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் ஒன்றைரை கோடி பேர் அந்த கட்சியில் சேர்ந்திருப்பார்கள். பிறகு ஏன் திமுகவை பார்த்து பயப்படுகிறீர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.