இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக ஆர்எஸ்எஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்த மாநாட்டிற்கு அதிமுக சார்பில் மேற்கொள்ளப்படும் உதவிகள் குறித்தும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பொருட்காட்சி பார்ப்பது போன்ற சுற்றுலா பார்வையுடன் வந்து செல்கின்றனர். அடுத்தபடியாக இந்த மக்களை மத வெறிக்கு தயார் செய்கிற வேலையை செய்வார்கள். இன்றைக்கு மாநாட்டிற்கு வருவதற்காக முழுக்க பணம் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்காக ஆட்களை கூட்டி வருவதற்கு உசிலம்பட்டி கிராமப் பகுதிகள், சுற்றுவட்டார மாவட்டங்களில் தினகரன் கட்சியினர், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என அனைவரும் வேலை பார்க்கின்றனர்.
பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மதுரையில் ஒவ்வொரு கோவில்களாக சென்று, பொது மக்களுக்கு நோட்டீஸ்களை கொடுக்கிறார்கள். அப்போது மாநாட்டிற்கு சாமி கும்பிட வாங்க. அங்கு வந்து ஆயிரம் ரூபாய் வரை பணம் வாங்கி கொள்ளுங்கள் என்று ஆட்களை திரட்டுகின்றனர். ஏழ்மையான மக்கள் உள்ள பகுதியாக தேர்வு செய்து ரூ.1000 முதல் ரூ.500 வரை கொடுக்கிறார்கள். இந்த கூட்டத்தை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக மாற்ற பார்க்கிறார்கள்.
இந்த தவறுக்கு முன்னுதாரணம் செய்தவர் அமைச்சர் சேகர்பாபு. முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய போதே அதை தடுத்து இருக்க வேண்டும். தற்போது இவர்களும் நடத்துகிறார்கள். அரசியலில் மதத்தை கலப்பது தவறானதாகும். அதை யார் கலந்தால் என்ன? முருகன் கோவில்களுக்கு ஆகம முறைப்படிதான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். வயலூர் கோவில் விவகாரத்தில் பிராமணர் அல்லாதவரை அர்ச்சகராக நியமித்த உத்தரவை நீதிபதி சுவாமிநாதன் ரத்து செய்தார். இன்றைக்கு ஆகம விதிகளை மீறி சாலையோரத்தில் முருகன் சிலையை வைத்து பூஜை செய்கிறார்கள். தற்போது ஆகம விதிகள் தடுக்குமா? தடுக்காதா?
ஆறுபடை வீடுகளை தனியார் வைக்க வேண்டும் என்றால், அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். முத்தமிழ் முருகன் மாநாட்டில் பூஜைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இங்கே பாஜகவுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மத வழிபாடு நடத்தினால் ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். இவை எதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. கடைசியாக இ-பாஸ் என்பதே கிடையாது என்று சொல்லிவிட்டனர். பாதி உளவுத்துறையும், காவல்துறையும் இந்து முன்னணிக்கு ஆதரவு அளித்தனர். மீதி பாதி நீதிமன்றம் ஆதரவு அளித்து, மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவி கொண்டிருக்கிறார்கள்.
நீதிமன்றத்திலேயே இது ஆன்மிக மாநாடு அல்ல. கலவர மாநாடு என்று சொன்னோம். இந்த நிலையில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். திருப்பரங்குன்றம் விவகாரம் முதல் தற்போது வரை அரசின் ஒரு பகுதி, உளவுத்துறையின் ஒரு பகுதி, அரசு வழக்கறிஞர்களில் ஒரு பகுதி, பாஜகவுக்கு ஆதரவாக நிற்கிறது. அப்போது முதலமைச்சருக்கு எப்படி தகவல் போகும்? உளவுத் துறை, காவல் துறையின் முக்கிய அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். உண்மை தகவல்களை உளவுத்துறை, முதலமைச்சருக்கு கொண்டு செல்வது கிடையாது.
இ-பாஸ் நிபந்தனை, என்பது தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை ஆகும். நீதிபதி புகழேந்திக்கு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த நீபதிபதி சுவாமிநாதன் இ-பாஸ் வேண்டாம் என்று உத்தரவிடுகிறார். இதன் பின்னணி என்ன என்றால்? ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பாஜக, கூட்டணி கட்சிகள் எல்லாம் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் காவல் நிலையத்திற்கு சென்றார்கள் என்றால், நாளை பிரச்சினை ஏற்பட்டால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகம் தெரியாத நபர்களும் மாட்ட நேரிடும். அதிமுக, தினகரன், ஒபிஎஸ் போன்றவர்களின் ஆட்கள் மாட்டிக்கொள்ள நேரிடும். இதை தவிர்க்க திட்டமிட்டு இ-பாஸ் வேண்டாம் என்று நினைக்கின்றனர். முன்கூட்டியே பாஸ் வாங்கா விட்டால் எவ்வளவு கூட்டம் வரும் என்று எப்படி கவனிக்க முடியும். மாநாட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் திமுக அரசு மீது தான் பழி விழும். அரசும் இதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கும் செல்வது கிடையாது. அரசில் ஊடுருவி இருக்கும் ஆர்எஸ்எஸ்காரர்கள் திட்டமிட்டு வேலை செய்கின்றனர். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது நடக்கிறது.
இன்றைக்கு கோவை, ஈரோட்டில் உள்ள முதலாளிகளை எல்லாம் மிரட்டி ஆட்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அனுப்பவும் மிரட்டியுள்ளனர். மாநாட்டை தடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது அரசுத் தரப்பில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்கறிஞர் தான் ஆஜராகினர். நீதிபதிகள் கேட்ட உடன் அவர்கள் பின்வாங்குகின்றனர். சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் இருக்கிறார். அவர் ஆஜராகி இருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அரசு ஏதேனும் தவறான நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் செல்வது தமிழ்நாட்டை வீழ்த்திவிடும். அதற்கு எதிராக மதுரை மதநல்லிணக்க அமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மதுரை நகருக்குள் அவர்கள் வரவில்லை. வெளியில் இருந்துதான் மக்களை அழைத்து வருகிறார்கள்.
செல்லூர் ராஜு எடப்பாடி சொன்னால் நான் மாநாட்டிற்கு போவேன் என்று சொல்கிறார்கள். அவர்கள் சந்தர்ப்பவாதிகள். அவர்கள் எந்த பக்கம் வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும் பயணிப்பார்கள். திமுகவை விமர்சிக்க காரணம், அங்கு இன்னும் சிலர் கொள்கையோடு இருக்கின்றனர். நாம் சொன்னால் கேட்பார்கள் என்று தான். அதிமுகவில் கேள்வி கேட்கக் கூடஆள் கிடையாது. அவர்களுக்கு தேவை அரசியல் அதிகாரம், பணம் சம்பாதிக்க வேண்டும். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் மரபு, மதநல்லிணக்கம் பற்றி எல்லாம் அவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.