இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை காரணமாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் மற்றும் போர் தொடர்பாக ஊடகங்கள் பரப்பிய வெறுப்பு பிரச்சாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முழு அளவிலான போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக சொல்லியுள்ளனர். டிரம்ப் முதன் முறையாக பாராட்டுக்கு உரியவராக இருக்கிறார். இது ஒரு நல்லதொரு முடிவு ஆகும். போரை தூண்டக்கூடிய ஓராயிரம் வார்த்தைகளை விட அமைதியை தூண்டக்கூடிய ஒரு வார்த்தை என்பது மேலானது. நம்ம வீட்டில் ஒருவர் போர் முனையில் இருந்தால் நாம் எப்படி உணர்வோமோ, அப்படி தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும். வைப் என்றெல்லாம் அணுகக்கூடாது.
போர் நிறுத்தம் மேற்கொள்ள சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகள் பின்னால் இருந்து முயற்சி செய்தார்கள். இறுதி வார்த்தைகள் யார் சொன்னால் இவர்கள் கேட்பார்களோ அவர்கள் மூலமாகத்தான் வந்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மோதல் முழுமையான போராக மாறாமல், இன்றைக்கு போர் நிறுத்தம் வந்துள்ளது. மதியம் 3 மணி அளவில் இருதரப்பும் பேசியுள்ளதாக சொல்கிறார்கள். இது ஒரு நலத் தொடக்கம். மோடி அரசுக்கு நிர்பந்தம் இருந்தது. பகல்காம் தாக்குதலுக்கு பிறகு எப்போது தாக்குதல் நடத்தப்போகிறீர்கள். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இன்றைக்கு போர் வந்து முடிந்திருக்கிறது.
குறைந்தபட்ச காமன் சென்ஸ், இன்டெலிஜென்ஸ் இருந்தால் நீங்கள் போருக்கு போக மாட்டீர்கள். அதனால் இந்த விஷயத்தில் டிரம்பின் வார்த்தைகள் சரியானது. போர் தொடர்பாக கடந்த 3 நாட்களாக மீடியாக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அட்டூழியங்கள் ரொம்ப ரொம்ப அதிகமாக உள்ளது. ரிபப்ளிக் டிவி அசாம் முனீரை கைது செய்துவிடுவார்கள். சிஎன்என் இஸ்லாமாபாத்தில் குண்டு போட்டு முழுமையாக அழித்து விடுவார்கள். டைம்ஸ் நவ், பாகிஸ்தான் பிரதமரை பதுங்கு குழியில் போய் உட்கார வைத்துவிடுவார்கள். அதற்கு நிகராக தமிழ்நாட்டில் சில ஊடகங்களும் அதே வழியில் சென்றார்கள். இதை மத்திய ரசிக்கிறது.
அதே வேளையில் முறையாக செய்திகளை வெளியிட்ட நிறுவனங்களை தண்டிக்க தொடங்கியுள்ளனர். வயர் இணைதள விவகாரத்தில் என்ன நடைபெற்றது என்றால் ரபேல் விமானம் ஒன்றை நாம் இழந்துள்ளோம். இந்த செய்தியை ரபேல் நிறுவனத்தை கோட் செய்து சிஎன்என் வெளியிடுகிறது. அதை பாகிஸ்தான் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். சிஎன்என் செய்தியில் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்று வயர் செய்தி வெளியிடுகிறது. அதனால் அரசாங்கம் புதிய சட்டத்தின் அடிப்படையில் நோட்டீசே கொடுக்காமல் வயர் நிறுனத்தை பிளாக் செய்ய சொல்கின்றனர். மத்திய அரசிடம் காரணம் கேட்கிறபோது தான் இது தெரியவருகிறது. பின்னர் அந்த கட்டுரை நீக்கப்படுகிறது.
இந்தியா வேறு வழியின்றி போரை தொடங்குகிறது என்றால், அதை எப்படி ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதலும் பொறுப்புணர்வும் இல்லாமல் அதில் லாபம் பார்க்கிற செய்திச் சேனல்கள் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சில செய்தி ஊடகங்களும் அடங்கும். ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரை டிரேட் மார்க்காக பதிவு செய்வதும், எங்களிடம் போர் செய்திகளை அதிகம் பார்த்தனர் என்று விளம்பரப்படுத்துவதும் பிணத்தை வைத்து அரசியல் செய்வதாகும். பெரும்பாலான மக்கள் இதை நம்புகிறார்கள். கொஞ்ச நாட்களில் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்வார்கள்.
தேசிய வாதம் என்பது என்றைக்குமே ஆபத்தானது. தேச பக்தி என்பது சரியானது. சுதந்திர போராட்டத்தின் உச்சத்தில் கூட தேசியவாதம் என்கிற வெறியை நாம் வளர்க்க வில்லை. நமது முன்னோர்கள் நம்மை அடக்கியாண்ட வெள்ளையர்கள் மீது கூட வெறுப்பை கக்காமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ்-க்கு அத்தகைய பாரம்பரியம் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன், ஊடகங்களின் நேரேட்டிவ், பிரசன்டேஷன் ஒத்துப்போகிறது.
பாகிஸ்தானிடம் இருந்து இந்தியாவை இந்திய ராணுவம் காப்பாற்றும். ஆனால் வெறிபிடித்து அலைகிற இந்திய செய்தி சேனல்களிடம் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் யார் காப்பாற்ற போகிறார்கள். இன்றைக்கு போர் குறித்து பேசக்கூடிய முட்டாள்கள், வெறிபிடித்தவர்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் போர்முனையில் இருந்தால் என்ன விரும்புவார்கள். போர் முடிந்து அவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இன்றைக்கு போரை குறித்து வைப் என்று சொல்வது ரேட்டிங்கிற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை காட்டுகிறது. இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. ஒரு முழு அளவிலான போரை இரு நாடுகளாலும் தாங்க முடியாது என்பதுதான் உண்மை.
போரில் வெற்றி தோல்வி என்பது கடந்த காலத்தோடு முடிந்துபோன கான்செப்ட். போரில் வெற்றி பெற்றாலும் அதற்கான பெரிய விலையை கொடுக்க வேண்டும். இரண்டாவது 2 நாடுகளும் அணு ஆயுத நாடுகளாகும். இருவரும் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் இல்லை. வழக்கமான போரே அணு ஆயுத போராக மாறுவிடும். ஏனென்றால் பல மின்நிலையங்கள் அணு சக்தியில்தான் இயங்கி கொண்டிருக்கின்றன. எனவே பேரழிவின் முனையில்தான் 2 நாடுகளும் நின்று கொண்டிருக்கின்றன. பொறுப்பை உணராமல் இதை வைத்து லாபம் பார்கக வேண்டும் என்று மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தொலைக்காட்சிகள் இன்றைக்கு போர் வெறி பிடித்து அலைகிறார்கள். இதன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயலை செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசாக இதனை மோடி அரசு அனுமதிக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.