திமுகவின் இளைஞர் அணியில் உள்ள நிர்வாகிகள் பலம் கூட விஜய் கட்சியில் இல்லை. விஜய் தனக்கு கிடைக்கு ஊடக வெளிச்சத்தை வைத்து மீடியா பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் என ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி விமர்சித்துள்ளார்.

முருக பக்தர்கள் மாநாடு மற்றும் நடிகர் விஜயின் சுற்றுபயணம் தொடர்பாக ஊடகவியலாளர் இந்திரகுமார், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மதுரையில் நடைபற்ற முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 5 லட்சம் பேர் வந்ததாகவும், 3 லட்சம் பேர் வந்ததாகவும் பாஜகவினர் மாற்றி மாற்றி சொல்கின்றனர். ஆனால் அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அதிகபட்சம் 40 ஆயிரம் பேரை கூடியிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இந்த மாநாடு மிகப்பெரிய தோல்வி ஆகும். முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மேடையில் இருந்தபோதே, பெரியார், அண்ணா குறித்த அவதூறு வீடியோ ஒளிபரப்பப்படுகிறது. அன்றை இரவு முதலே அதிமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுகிறது. இருந்தாலும் அந்த வீடியோவை தவிர்த்து இருக்கலாம் என்று ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளிக்கிறார். மறுநாள் எஸ்.பி.வேலுமணி வேறுவிதமான விளக்கத்தை அளிக்கிறார். பெரியார், அண்ணா குறித்த விமர்சனத்திற்கு உடனடியான பதிலடி என்றால் இதற்கு மேலாக கூட்டணி தொடராது என்று அறிவித்து இருக்க வேண்டும். கோவைக்கு மோகன் பகவத் வருகிறார் என்று தெரிந்த பிறகு தான், எஸ்.பி.வேலுமணி அவருக்கு கொடுக்க முருகன் சிலையை வாங்கிக்கொண்டு செல்கிறார். தான் சென்ற கூட்டத்திற்கு மோகன் பகவத் வந்திருந்ததாக சொல்கிற எஸ்.பி.வேலுமணி, எதற்காக அவருக்கு சால்வை அணிவிக்கிறார். தெரிந்தே எல்லாவற்றையும் செய்துவிட்டு மக்களை ஏமாற்றுவதற்காக கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்கிறார்.
மதுரை மாநாட்டிற்கு ஆள் சேர்க்கும் வேலையை அதிமுகவினர் செய்துள்ளனர். உள்ளூரில் இருந்து பாஜகவினரை தவிர்த்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அதிமுகவினரை காசு கொடுத்து அழைத்து வந்துள்ளனர். அதிமுக தரப்பில் கொள்கை வேறு, கூட்டணி வேறு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர். 2023ல் எடுத்தது போன்ற நிலைப்பாட்டினை எடுக்க வாய்ப்பு உள்ளதாக வேலுமணி சொல்கிறார். அப்போது அவர்கள் அண்ணாவை, பெரியாரை தானே திட்டினார்கள். ஜெயலலிதாவை திட்டினால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களோ? அதிமுகவினர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு கிடையாது. காரணம் அவர்கள் வசமாக கிக்கியுள்ளனர். எஸ்.பி.மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு, சேலம் இளங்கோவன் மீதான வழக்கு, எடப்பாடியின் சம்பந்தி மற்றும் அவரது மகன் மிதுன் தொடர்பான இடங்களில் நடைபெற்ற சோதனை என வழக்குகள் மூட்டைகட்டி உள்ளன. இந்த மூட்டைகளில் இருந்து அவர்களால் வளியே வர முடியாது. சுயமரியாதை உணர்வு இருந்தால் கூட்டணி அறிவிப்பை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். மாறாக அமித்ஷா, உங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்களின் கை ஓங்கி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
அடுத்தபடியாக விஜயுடன் நடைபெறுகிற பேச்சுவார்த்தை என்பது விஜயை எந்த எல்லைக்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். சந்திக்கின்ற முதல் தேர்தலிலேயே கூட்டணி என்று வந்துவிட்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு தனித்து செல்வாக்கு செலுத்துவதற்கான பெரிய அளவுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஏனென்றால் அதிமுக உடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றால் அந்த கட்சி என்ன ஆகும் என்பதற்கு ஏற்கனவே ஒரு உதாரணம் உள்ளது. தேமுதிக கூட்டணியில் இருந்தாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஜெயலலிதா அங்கிருந்த 11 எம்எல்ஏக்களை தன்னுடைய கட்சி பக்கம் இழுத்துக்கொள்கிறார். கடைசியில் அந்த 11 பேரும் அதிமுகவில் போய் சேர்ந்தார்கள். தற்போது அவர்களின் நிலைமை என்ன ஆனது. அதே நிலைமைதான் விஜய்க்கும் ஏற்படும்.
கூட்டணி ஆட்சி என்று பேசினாலும் விஜய் வளர்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். அதையும் விஜய் தெரிந்து வைத்திருக்கிறார். மமிதா பைஜு ஒரு கூட்டத்தில் சொல்கிறார், விஜய் அண்ணனிடம் பேசினேன். அவர் தேர்தல் முடிந்து பார்க்கலாம் என்று சொன்னதாக சொல்கிறார். அப்போது விஜய்க்கும் இன்னும் சினிமா ஆசை இருக்கிறது. அப்போது, தேர்தலில் போட்டியிடுவது என்பது குறுகிய கால இலக்கு ஆகும். இது தோல்வி அடைந்தால் உங்களுக்கு வேறு வழி உள்ளது. ஆகஸ்ட் மாதம் விஜய சுற்றுபயணத்தை அறிவித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படத்தை முன்னிட்டு அவர் சுற்றுபயணத்தை அறிவித்துள்ளார். இது ரஜினியின் டெம்ப்லேட் ஆகும். அதே டெம்ப்லேட்டை விஜயும் கையில் எடுத்திருக்கிறார்.
திமுகவின் இளைஞரணியிடம் இருக்கும் நிர்வாகிகள் பலம்கூட, விஜய் கட்சியிடம் இல்லை. அடிப்படை வாக்கு வங்கி என்பது நிர்வாகிகள் பலம் தான். அதிமுகவும், திமுகவும் எப்படி 30 சதவீத வாக்கு வங்கியை தக்க வைக்கிறார்கள். அது நிர்வாகிகளின் பலமாகும். அந்த வாக்கு வங்கி விஜயிடம் உள்ளதா? பெரியார் குறித்து பேசினால் வாயை மூடிக் கொண்டு இருப்போம். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் விஜய் வாயை திறக்கவில்லை. பரந்தூர் போராட்டம் நடத்த வருவதாக சொன்னார். திரும்ப அந்த பக்கம் போகவே இல்லை. அரசு ஊழியர்கள் போராட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தப்போகிறாரா? என்றால் ஒரே ஒரு அறிக்கை வெளியிடுகிறார். ஒரு நடிகர் என்பதால் விஜய்க்கு ஊடக வெளிச்சம் அவருக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவர் மீடியா பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார். அதை தவிர்த்து விஜயிடம் நிர்வாக பலம் என்று எதுவும் கிடையாது.
1949 முதல் 1967 வரை எதிர்க்கட்சியாக திமுக செய்த வேலையில் புள்ளி ஒரு சதவீதத்தை கூட விஜயால் செய்து காட்ட முடியாது. அவர் நடத்தப்போகிற 100 நாள் சுற்று பயணத்தில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியும். இன்றைக்கு திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கிற முயற்சியை தொடங்குகிறார்கள். கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை சந்திக்க செல்கிறார்கள். இது போன்ற பெரிய அளவிலான மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்த உரிய கட்சி கட்டமைப்புகள் வேண்டும். இதுபோன்ற விஜயால் நடத்த முடியாது. அதிமுக, தவெக இரண்டு கட்சிகளுமே கட்சி வளர்ச்சியிலோ, மக்களின் நம்பிக்கையை பெற முயற்சிக்காத கட்சிகள் என்பதுதான் விமர்சனமாகும். இதை தாண்டி அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை அல்ல, இவ்வாறு அவர் தெரிவித்தார்.