மாநிலங்களைவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய பாஜக எம்.பி-ஐ கண்டிக்கும் விதமாகவே பாஜக தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் வைகோ மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே நடைபெற்ற விவாதம் குறித்து வல்லம் பஷீர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடைபெறுகிற போது வைகோவுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மோதல் வெடித்தது. தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது என்று வைகோ சொன்னார். அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க நிர்மலா வலியுறுத்தியுள்ளார். நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றை நினைவு படுத்த வேண்டி உள்ளது. 6 பிரதமர்களை பார்த்தவர் வைகோ. காங்கிரஸ் கட்சியினுடைய பிரதமர் ராஜிவ்காந்தியை, ராஜிவ் காந்தி எங்கே ஓடுகிறீர்கள் என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு போங்கள் என்று சொன்னவர் வைகோ. இந்திரா காந்தி அம்மையாரே தன்னுடன் இருக்கக்கூடிய மொத்த காங்கிரஸ் உறுப்பினர்களை, வைகோ ஒருவரே சமாளித்து விடுவார் என்று சொல்லி இருக்கிறார். வைகோவின் வரலாறு நிர்மலா சீதாராமனுக்கு தெரிந்திருந்தாலும் அதை மறந்துவிட்டு, அவர் அன்பாரிலிமெண்ட் வேர்டு என்று சொல்லி இருக்கிறார்.
அண்ணாவின் வழியில் தமிழ்நாட்டில் முடிந்தால் கால் வையுங்கள் என்று சொன்னார். ஏன் அப்படி சொன்னார் என்றால் சுதான்ஷு என்கிற பாஜக எம்.பி. தேவையில்லாத செய்திகளை நாடாளுமன்றத்தில் பேசுகிறார். குறிப்பாக இஸ்லாமியர்களை கொலைகாரர்கள் என்றும், அவர்கள் குற்றச் செயல் புரிவதற்காக இந்த மண்ணுக்கு வந்துள்ளதை போலவும் அவர் பேசியது நாடாளுமன்றத்தில் புயலை கிளப்புகிறது. வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடே ஓரணியில் திரண்டு நிற்கக்கூடிய கொதிநிலையான நேரத்தில் அவையில் நின்று யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் தான் குற்றவாளி என்று பேசினார். இதனை சுட்டிக்காட்டு அவரை எல்லோரும் கண்டிக்கிறார்கள். உடனே நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினராக உள்ள வைகோ எழுந்து இப்படி பேசிவிட்டு தமிழ்நாட்டில் நீங்கள் கால் வைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
வைகோ பேசியது அன்பார்லிமெண்ட் வேர்டு என்றால், சுதான்ஷூ பேசியது சரியான வாதமா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது கல் எறியும் வேலையை சுதான்ஷு செய்திருக்கிறார். அது நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வார்த்தைகளா? அவருடைய பேச்சுக்கு எதிர்வினை ஆற்றுவது அன்பார்லிமெண்ட்ரி என்கிறீர்கள். ஆனால் எதற்காக எதிர்வினை ஆற்றினார்கள் என்பதை ஏன் பேச மறுக்கிறீர்கள். ஜெகதீப் தங்கர் அவையை நடுநிலையாக நடத்துங்கள். அதை விடுத்து பாஜகவினரின் கருத்துக்கு எதிரானவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்குவது சரியா? நாளை எதிர்ப்பே இல்லாமல் இவற்றை நாடாளுமன்றத்தில் பேசினோம் என்று பதிவு செய்வதற்கா? இதெல்லாம் மூத்த நாடாளுமன்றவாதியான வைகோவுக்கு தெரியாதா? அதனால்தான் அவர் எழுந்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார். இதனை அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும். அப்படி இடம்பெற்றால்தான் இப்படி ஒரு தலைவர் பேசினார். அன்றைக்கே நாடாளுமன்றம் களேபரம் ஆனது. தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க முடியாது என்று எச்சரிக்கிறேன் என்று சொன்னார் என வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
வைகோ இன்றைக்கு தமிழ்நாட்டில் கால்வைக்க விடமாட்டோம் என்று சொல்கிறார். நீங்கள் மோடியிடம் சென்று இதை கேளுங்கள் அவர் தனது தமிழக பயணத்தை ரத்து செய்தாலும் செய்வார். ஏனென்றால் அவருக்கு வைகோ யார் என்று தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் வைகோ அங்கம் வகித்தார். பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில், ராஜபக்சே பங்கேற்றதால் அன்றைக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். கூட்டணி கட்சி தலைவர்கள் விஜயகாந்த், அன்புமணி எல்லாம் பதவி ஏற்பு விழாவில் இருந்தார்கள். ஆனால் வைகோ சிறை கொட்டடியில் இருந்தார். நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை காயப்படுத்திய சுதான்ஷுவை ஆமோதித்து விட்டு, அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்த வைகோவை கண்டிப்பது என்பது உங்களுடைய மோசமான முகத்தை காட்டுகிறது.
நிர்மலா சீதாராமன் எந்த காலத்திலும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். பாஜகவில் எப்போது இரண்டு தடங்கள் இருக்கின்றன. எப்போதும் பொன். ராதா தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அமைச்சராவார். எல். முருகன் விதி விலக்கு. அது அடையாள அரசியலாகும். ஆனால் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாமலே மத்திய அமைச்சராக இருப்பார். அதேபோல் ஜெய்சங்கர், எந்த தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எப்படி வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு கிடைத்தது? இந்த சித்தாந்தத்தை உருவாக்கியவர்கள் கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்துவிடுவார்கள். அதனை பின்பற்றுவர்கள் போய் முட்ட வேண்டும். நிர்மலா சீதாராமன், மக்களை சந்தித்து ஒருபோதும் வாக்குகளை கேட்க மாட்டார். அப்படியே அவர் போட்டியிடுவதாக இருந்தாலும், அவர் வடமாநிலத்தில் தான் போட்டியிடுவார்.
தமிழ்நாட்டில் பாஜக காலூன்றும் என்றும் தமிழிசை சொல்கிறார். முதலில் அவர்களுக்கு காலே கிடையாது. அதனால் கால் முளைப்பதற்கான வேலைகளை முதலில் செய்யுங்கள். தமிழிசைக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் பாஜக ஒரு காலத்திலும் முன்னேறாது. ஒரு காலத்திலும் அதிகாரத்துக்கு வராது. தமிழ்நாடு பகுத்தறிவு மிக்க மாநிலமாகும். பேரிடர் காலத்தில் நிதி கேட்கிறோம். அந்த நிதி ஒன்றும் பிச்சை கிடையாது. தர வேண்டிய உரிமையை கொடுங்கள் என்கிறோம். மத்திய அரசுக்கு அதிகளவு வரியை தரும் மாநிலம் தமிழ்நாடு. அப்போது, நாங்கள் ஒன்றும் ஏடிஎம் மெஷின் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சொல்கிறார். மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதில் குறையை சொன்னதற்காகவே கூப்பிட்டு மிரட்டப்படுகிறார். இதை மக்கள் பார்த்தார்களா? இல்லையா?. தமிழர் விரோத அரசாக ஒரு அரசு உள்ளது. அந்த அரசை நடத்துகிற ஒரு அமைப்பு. அது தமிழ்நாட்டில் கால்பதித்து விடுமா? அதற்கு தமிழ்நாட்டு மக்கள் இடம் கொடுத்து விடுவார்களா? ஆனாலும் அவர்களுக்கு பொய் பேசுவதை தவிர வேறு வழியில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.