திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


சிறப்பு வழிபாடும் தீமிதியும்:
விழாவை முன்னிட்டு ஸ்ரீ பச்சையம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் தீ மூட்டப்பட்டு, விரதமிருந்து மஞ்சள் உடை அணிந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ கரகத்துடன் ஊர்வலமாக வந்து தீ மிதித்துத் தங்களது நேர்த்திக்ககடனைச் செலுத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு:

இந்தத் திருவிழாவைத் காண வெடால் கிராமத்தைச் சுற்றியுள்ள நெற்குணம், தேசூர், மஞ்சம்பட்டு, ஆச்சமங்கலம், தெள்ளார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும்; வேலூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம்:

விழாவில் கலந்துகொண்ட பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
