அகமதாபாத் தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமதாபாத் ஷிலாஜில் உள்ள திவ்யஜோத் பள்ளிக்கு வார இறுதியில் பல வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன, இது சர்கேஜ்-சாந்திபுரா வட்டத்திற்கு அருகிலுள்ள ஜெனீவா லிபரல் பள்ளிக்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் போல் இருந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வளாகத்தில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
பள்ளி அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கும் கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைவாகச் செயல்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் , காவல்துறையினரும் வளாகத்தில் பல மணி நேரம் முழுமையான சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த மின்னஞ்சல்களில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை மற்றும் வரதட்சணை வழக்கைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது -இதற்கு முன்பாக ஜெனீவா லிபரல் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் மின்னஞ்சலுக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என தெரியவந்துள்ளது. இருப்பினும் நிர்வாகம் தரப்பில் பள்ளி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும் என்று பெற்றோருக்குத் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநிலத்தில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ரீதியான விசாரணையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள ரினே ஜோஸ்லிடா( René joshlida) என்ற பெண்ணின் ஈமெயில் முகவரியில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குஜராத்தில் இருந்து பெண் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னையில் உள்ள கேகே நகர் போலீசார் உதவியுடன் அந்தப் பெண்ணின் வீடு மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு ரினே ஜோஸ்லிடா மற்றும் அவரது தந்தை ஆல்ட்வின் ஜோசப் ஆகிய இருவரையும் விசாரணைக்காக சென்னை விமான நிலையம் மூலம் குஜராத்திற்கு தனிப்படை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.