சென்னை பிரசிடென்ஸி கிளப் மேலாளர் அறையில் பற்றி எரிந்த தீ
சென்னை பிரசிடென்ஸி கிளப் மேலாளர் அறையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்தானது ஏற்பட்டதாக எழும்பூர் போலீசர் தகவல் தெரிவிக்கின்றனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் காலையில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதி பிரசிடென்சி கிளப். இதில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக விடுதியின் ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டதில் தீ விபத்து நிகழ்ந்த இடம் பிரசிடென்சி கிளப்பின் அலுவலகங்கள் செயல்படும் கட்டிடத்தில் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. இந்தக் கட்டிடத்தில் கீழ்த்தரத்தில் சமையல் அறைகளும், தீ விபத்து நிகழ்ந்த முதல் தளத்தில் மேலாளர் அறை இருந்ததாகவும் கூறியுள்ளனர். வழக்கம்போல் அறையைத் திறந்து ஏசியை சுவிட்ச் ஆன் செய்தபோது மின் கசிவு ஏற்பட்டது ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக மின்சாரத்தை முழுவதுமாக துண்டித்து பழுது பார்ப்பதற்கு ஊழியர்கள் செல்வதற்குள் அறை முழுவதும் தீ பரவி கோப்புகள் நாசமானதாக தெரிகிறது.


