சென்னை மெரினா கடற்கரை சாலை பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞர்களை மீட்டு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ராயபுரத்தைச் சேர்ந்த சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், சேப்பாக்கம் பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தனது இல்லத்திற்கு அவ்வழியாக திரும்பிச் சென்று கொண்டிருந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்துக்குள்ளான இளைஞர்களை உடனடியாக மீட்டதோடு தாமதிக்காமல் அவர்களை தனது காரில் அழைத்து சென்று ராஜிவ்காந்தி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் விபத்துக்குள்ளான இளைஞர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கேயே சிறிது நேரம் இருந்த அமைச்சர் சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார்.


