2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பி.ஆர்க். பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கல்லூரிகளில் கட்டிடக்கலை பாடப்பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த பாடப்பிரிவுகளில் உள்ள 1300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின்கீழ் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நடத்துகிறது. அதன்படி, கட்டிடவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பி.ஆர்க். பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு பி.ஆர்க் கலந்தாய்விற்கு 1,680 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 1,399 மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியுடையவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 1399 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் மாவட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்களுக்கு சென்று 25 ஆம் தேதிக்குள் சரிசெய்துகொள்ளலாம் என்றும், ஏற்கெனவே அறிவித்தபடி 26 ஆம் தேதி முதல் பி.ஆர்க் கலந்தாய்வு தொடங்கவுள்ளதாகவும் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.