சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை ஆர்வலர் வீடியோ வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிபி அலுவலக வாசலிலேயே மர்ம நபர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், காலை நேரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு காவலர்கள் வாகனங்களில் ரோந்து பணிகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலர் கன்னியாபாபு சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இன்று காலை டிஜிபி அலுவலக எதிரே நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்கள் சிலர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் பாலியல் ரீதியாக சீண்டல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அந்த நபர் தட்டிக் கேட்டதாகவும், அதன் பின்பு ரோந்து காவலர்கள் யாரும் வராததால் நேரடியாக டிஜிபி அலுவலக வாசலில் உள்ள காவலரிடம் தெரிவித்தாகவும், மேலும் அவர்கள் தன்னை ஆபாசமாக பேசும் போது தான் அவர்களை தாக்கியதாகவும் காவலரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மர்ம நபர்கள் தன்னைத் தாக்க முற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கும் எனவும் அதை அடிப்படையாக வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, சென்னையில் காலை நேரங்களில் அதிக பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும், மேலும் காலையிலேயே கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் செல்வதால் அவர்களுக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது தற்காத்துக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறி தான்! என தெரிவித்துள்ளார்.
எனவே, பெண்கள் பாதுகாப்பாக உணர அதிகாலையிலும் இரவு நேரங்களிலும் காவலர்கள் ரோந்து பணியை அதிகமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் துறை சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகள் உரிமை ஆர்வலர் கூறிய கருத்துக்களை கேட்டுக் கொண்டதாகவும், நீங்கள் கூறிய தகவல்களையும் வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


