நடிகர் விஜய் தேவரகொண்டா தி கேர்ள் ஃப்ரெண்ட் பட வெற்றி விழாவில் ராஷ்மிகாவுக்கு முத்தமிட்டுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பெயர் பெற்று வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியிருந்த தி கேர்ள் ஃப்ரெண்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசையமைத்துள்ளார்.
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது விஜய் தேவரகொண்டா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது படக்குழுவினருடன் பேசிக் கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் கையைப் பிடித்து முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், தான் பார்த்ததிலேயே இந்த படம் மிகச் சிறந்த படம் என்றும் இந்த படத்தை பார்க்கும்போது பல இடங்களில் கண்ணீர் வந்ததாகவும், இதயம் கனமாக இருந்ததாகவும் கூறிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா பல பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் படத்தில் நடித்தது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஆகிய இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


