பிரபாஸுடன் நடிப்பது தனது கனவு என பிரபல நடிகை ஒருவர் பேசியுள்ளார்.
பிரபல நடிகை மாளவிகா மோகனன் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தது லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தனுஷ், விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது கார்த்தியின் சர்தார் 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.
அதே சமயம் இவர் தெலுங்கில் அறிமுகமாகி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் தி ராஜாசாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பீப்பிள் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மாருதி இப்படத்தை இயக்குகிறார். ஹாரர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கான காரணத்தை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “பெரும்பாலான படங்களில் ஹீரோவின் கேரக்டர் தான் பெரியதாக இருக்கும். ஹீரோயின் கேரக்டர் வலுவானதாக இருக்காது.
ஆனால் தி ராஜாசாப் படத்தில் என்னுடைய கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது போன்ற பிரம்மாண்ட படத்தில் அப்படி ஒரு கேரக்டர் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அது மட்டும் இல்லாமல் பிரபாஸுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. இவையெல்லாம் தான் நான் இந்த படத்தில் நடிப்பதற்கான காரணங்கள்” என்று தெரிவித்துள்ளார்.