தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ராஜேஷ். இவர் தமிழில் மட்டுமே கிட்டதட்ட 150 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றிய இவர் சின்னத்திரையிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில் தான் நேற்று (மே 29) நடிகர் ராஜேஷ் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். உயிரிழக்கும் போது ராஜேஷின் வயது 75. ஆனால் இவர் தன்னுடைய 40 வயதிலேயே தனக்கென கல்லறை கட்டியிருக்கிறார். இது தொடர்பான காரணத்தை அவரே பழைய பேட்டி ஒன்றில் கூறி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த பேட்டியில் அவர், “ஒருமுறை லண்டனுக்கு சென்றிருந்தேன். அப்போது காரல் மார்க்ஸ் கல்லறையை பார்த்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அதற்கு அடுத்த வருடமே எனக்கு நானே ஒரு கல்லறை கட்டினேன். காரல் மார்க்ஸ் கல்லறையில் அவர்களுடைய குடும்பத்தினரை அடுத்தடுத்து அடக்கம் செய்யும் வகையில் அறைகள் இருக்கும். ஒருவரின் உடல் கீழே போனதும் அடுத்தவரின் உடல் மேலே வைப்பது போன்று இருக்கும். எனவே அதே போல் நானும் ஒரு கல்லறை கட்டி வைத்தேன். அந்தக் கல்லறையை கட்டிய சில மாதங்களிலேயே என்னுடைய அம்மா தவறிவிட்டார். அதன்பின் என் அப்பா, மனைவி என்று அடுத்தடுத்து சில வருடங்களிலேயே அனைவரும் தவறிவிட்டார்கள். அவர்கள் அனைவரையும் அந்த கல்லறையில் தான் அடக்கம் செய்திருக்கிறேன். அடுத்தது எனக்காக அந்த கல்லறையில் ஒரு இடம் இருக்கிறது. அதை நான் 40 வயதிலேயே கட்டிவிட்டேன். தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டவன் நூறு வயது வரை இருப்பான் என்று ஒரு பழமொழி உண்டு. நான் நூறு வயது வரை இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த கல்லறையை கட்டவில்லை. என்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்று நான் இறந்த பிறகு பார்க்க முடியாது. அதனால் இதுதான் என்னுடைய கல்லறை என்று நானே பார்த்துக் கொள்ளும் வகையில் அதை கட்டி இருக்கிறேன். மேலும் எனக்கு பிடித்த வசனத்தையும் அந்த கல்லறையில் எழுதி வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.