அட்லீ – அல்லு அர்ஜுனின் புதிய படம் பொங்கல் தினத்தை டார்கெட் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தமிழ்நாட்டிலும் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் தனது 22 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பை மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தவிர இந்த படத்தில் அல்லு அர்ஜுன், மூன்று வேடங்களில் நடிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளாராம். அதன்படி ஜான்வி கபூர், மிர்ணாள் தாகூர், தீபிகா படுகோன் ஆகிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தை 2027 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். ஏற்கனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.