அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில், துபாயில் முன்னோட்டம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவர் இவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. மடோன் அஸ்வின் இயக்கியிருந்த மாவீரன் படத்தில் மிஷ்கின், சுனில், அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ஆர் ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் ஒரு ஏலியனை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில், நாளை அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதையடுத்து. அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி துபாயில் முன்னோட்டம் வௌியிடும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி அயலான் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.