இயக்குனர் சேரன், பைசன் படம் குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ‘பைசன்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து பசுபதி, அமீர், லால், ரஜிஷா ஆகியோர் நடித்திருந்தனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், அப்பிளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருக்கிறார்.
மாரி செல்வராஜின் மற்ற படங்களை போல் இந்த படமும் தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த படம் தொடர்பாக மிக நீளமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு தம்பி மாரி செல்வராஜின் ஆகச்சிறந்த படைப்பு பைசன். நேர்த்தியான கதை அமைப்பு, கதாபாத்திரங்களும் ஆச்சரியப்படவும், கைதட்டவும், மெய்சிலிர்த்து கண்ணீரையும் வரவழைத்தது. கபடி விளையாட்டு என்பது பழக்கப்பட்டதுதான். ஆனால் அந்த கபடி வீரனை சுற்றியுள்ள உலகம் புதுசு. சாதிய வேறுபாடுகள் களைந்து நடுநிலையான மனிதனாய் நின்று மாரி கேட்கும் கேள்விகள் தான் எனக்கும்.
அதாவது முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும். எதிரில் நிற்பது சாதியாக, சமூகமாக, அரசியல் தலைவர்களாக இருக்கலாம். ஏனெனில் இந்த சமூகத்தில் இப்படிப்பட்ட திரைப்படங்களை உருவாக்க தூண்டியவர்கள் அவர்களே. படத்தின் உருவாக்கத்திற்காக மாரி செல்வராஜ் மெனக்கெட்டிருக்கும் விதம், ஈடுபாடு அசாத்தியமாக இருக்கிறது. நீ எங்களுக்குள் ஒரு கலைஞன். உன்னைச் சுற்றி எந்நாளும் நாங்கள் அரணாக நிற்போம். தொடர்ந்து இச்சமூகத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்காகவும் உன் பேனா எழுதட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


