ரஜினியின் கூலி பட ரிலீஸ் 2025 ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அடுத்தது வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி முதல் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இப்படம் 2025 கோடையில் மே 1 அன்று திரைக்கு வரும் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கூலி படத்தினை 2025 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.