இந்தியில் உருவாகும் சிங்கம் அகெய்ன் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை வெளியிட்டனர். மூன்றிலுமே சூர்யா கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த வரிசையில் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார். ரோஷித் ஷெட்டி இப்படத்தை இயக்கியிருந்தார். சிங்கம் படத்தை போலவே, இந்தியிலும் அத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் சிங்கம் ரிட்டன்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், சிங்கம் 2 படத்தை ரீமேக் செய்யாமல் புதிய கதையை வைத்து இப்படத்தை தயாரித்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் சிங்கம் அகெயன் என்ற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி. இப்படத்தில் அஜய் தேவ்கன் மட்டுமன்றி ரன்வீர் சிங், அக்ஷய் குமார் ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இதில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோரும் பங்கேற்றனர். தற்போது, படத்தில் தீபிகா படுகோனும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தீபிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து அஜய் தேவ்கன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காவல் அதிகாரி வேடத்தில் தீபிகா படுகோன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.