நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது இயக்குனராகவும் உருவெடுத்து தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். அதேசமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடைசியாக இவர் லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருப்பினும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து பரஸ்பர விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவும் கொடுத்திருந்தனர். அதாவது 2004 இல் நடைபெற்ற தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் அக்டோபர் 7ல் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையாம். எனவே இந்த வழக்கை வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இருவரும் அன்றைய தினம் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு தொடர்ந்து லைக்குகள் போட்டு வருவதாகவும் இருவரும் மீண்டும் தனது திருமண வாழ்க்கையை தொடங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.