தனுஷின் 52 ஆவது படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் ராயன் எனும் திரைப்படம் வெளியானது. கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையில் நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கியதோடு, குபேரா எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக இவர் மீண்டும் ஒரு புதிய படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கு தற்காலிகமாக D52 மற்றும் DD4 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
— Dhanush (@dhanushkraja) September 19, 2024
இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனமும் நடிகர் தனுஷும் இன்று (செப்டம்பர் 19) மாலை 5 மணி அளவில் (D52, DD4) படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஆகையினால் இது என்ன அப்டேடாக இருக்கும்? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த படத்தில் தனுஷ் தவிர அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.