நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ஜூலை மாதத்தில் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் அட்லீ ரஜினியை இயக்கப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ, அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட சல்மான் கான் நடிப்பில் அட்லீ புதிய படத்தை இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் அட்லீ இயக்கப் போகும் புதிய படமானது இரண்டு கதாநாயகர்களின் கதையாக இருக்கும் என்றும் அதில் ஒரு கதாநாயகனாக சல்மான் கான் கமிட் ஆகியுள்ளார். மற்றொரு கதாநாயகனாக நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி, சல்மான் கான், அட்லீ ஆகியோரின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- Advertisement -