இயக்குனர் ராம் தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்குவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த வகையில் இவர் ஜீவா, அஞ்சலி நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி பெயர் பெற்றார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் இயக்குனர் ராமும் ஒருவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் சினிமாவின் தரம் குறையாமல் இருக்கும். எனவே இவருடைய அடுத்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தான் இயக்குனர் ராம், ஏழு கடல் ஏழு மலை என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான நிலையில் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. அதே சமயம் இந்த படம் ஏற்கனவே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில் அடுத்ததாக டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ராம் இந்த படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதாவது, “என்னுடைய மற்ற நான்கு படங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இந்த படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். ஏனென்றால் இந்த படம் மானுடத்தின் காதலை பேசும் படம்” என்று கூறியுள்ளார்.