ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவுக்கு எண்கள் ஒதுக்கீடு, விரைவில் மனு விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்கப்படுகிறது.
நடிகரும் , தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவரது திரை வாழ்க்கையில் கடைசி படமாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன-9 அன்று திரைக்கு வர இருந்த நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று இறுதிவரை கிடைக்கவில்லை. குறிப்பாக திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு கடந்த 6ம் தேதி தணிக்கை வாரியம் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்துள்ளதாக இமெயில் அனுப்பினர்.
இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்ட தேதியில் திரைக்கு வர முடியாது என அறிந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி ஆஷா அமர்வு கடந்த 7ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களை கேட்டு கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில், 9ம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்கி உத்தரவிட்டனர்.

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, அம்மனு அன்று மாலையே அவசர வழக்காகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, ஜனநாயகம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும் மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்ததோடு வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனால் விஜய் நடிப்பில் இறுதி படமாக திரைக்கு வர இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை எனும் சூழல் ஏற்பட்ட நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன் உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை கடந்த சனிக்கிழமை அன்று தாக்கல் செய்தது.
இந்நிலையில் படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு விசாரணைக்கான எண்களை உச்ச நீதிமன்ற பதிவுத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இந்த வாரத்திலே வழக்கின் விசாரணையை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நாளை அல்லது நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஜனநாயகம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வு உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணையில் விஜய்! தூசி தட்டி எடுக்கப்படும் புதிய கேஸ்! சிவப்ரியன் நேர்காணல்!


