பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானாா்.
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானாா். இவா் அவருடைய தாயாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். ஜானகியின் ஒரே மகன் ஆவாா். இவா் சிறந்த பரதநாட்டிய கலைஞா். அத்துடன், விநாயகுடு, மெல்லபுவு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவா் கூலிங் கிளாஸ் என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளாா்.
இந்நிலையில், அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இசை உலகில் பெரும் பங்களிப்பு செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த இழப்பு, இசை ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முரளி கிருஷ்ணாவின் மறைவு செய்தியை பாடகி சித்ரா சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அன்பான சகோதரனை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வலியையும் துக்கத்தையும் கடக்கும் வலிமையை அந்த தாய்க்கு கடவுள் வழங்கட்டும்” என குறிப்பிட்டுள்ளாா்.


