கோயம்புத்தூரை சேர்ந்த டிடிஎஃப் வாசன் தான் பைக் ஓட்டுவதை வீடியோ எடுத்து அதை யூடியூபில் வெளியிட்டு மக்களிடையே பிரபலமானவர். இவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். அதேசமயம் இவர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் இவர் பல முறைகள் காவல்துறைகயினரால் கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இவரை வைத்து மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் இயக்குனர் செல் அம். ஆனால் ஒரு சில காரணங்களினால் இந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ், மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் டிடிஎஃப் வாசன் தொட்டதெல்லாம் வெற்றியாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இவர் தொட்டதெல்லாம் சர்ச்சைகளாக மாறி அவருக்கு சிக்கலாக போய் முடிந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது அவர், பாம்பு ஒன்றை கையில் வைத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், “இந்த பாம்பின் பெயர் பப்பி. நான் காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்றபோது இது என்னையே பார்த்துக் கொண்டு இருந்ததால் அதை அப்படியே எடுத்து வந்து வளர்த்து வருகிறேன்” என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதே சமயம் இதனால் மீண்டும் டிடிஎஃப் வாசன் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.