சிறந்த ஒரிஜினல் பாடல் பிரவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் “கோல்டன் குளோப்” விருது பெற்றுள்ள நிலையில் இசையைப்பாளர் கீரவாணி மற்றும் படக்குழுவினரை திரை பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.

பாகுபலிக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மூன்று மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் கலந்துகொண்டது. இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இந்த நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதை பெற்றுக் கொண்டனர்.
இது குறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் நாயகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோரை டேக் செய்து பாரட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் என பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இதேபோல, நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன்,இசைஞானி இளையராஜா,இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மோகன்லால்,மம்முட்டி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.