நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். விஜயை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதைத் தொடர்ந்து நடிகர் விஷால், தனது சமூக வலைதள பக்கத்தில், “நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணிகளை செய்யவில்லை. எதிர்காலத்தில் இயற்கை ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் மக்களுக்காக மக்களில் ஒருவனாக குரல் கொடுக்கவும் தயங்க மாட்டேன்” என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஷால் அரசியலுக்கு வருவது குறித்து விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி பேட்டி ஒன்றில்,”விஷாலுக்கு சிறுவயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உண்டு. அதனால் கடன் வாங்கியாவது அவர்களுக்கு உதவி செய்து விடுவார். இப்போது அவரின் தாயார் தேவியின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். மேலும் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார். எனவே விஷால் அரசியலுக்கு வருவார். நிச்சயம் ஜெயித்துக் காட்டுவார். விஷால், விஜய், அஜித் மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும். அதன் பின் திருமணம் முடிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தை வைத்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை” என்று பேசியுள்ளார்.