தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அவர் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யா நடிப்பில் கஸ்டடி என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். .
க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார். சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இந்தப் படம் மே மாதம் 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய வெங்கட் ப்ரபு “இதுவரை என் கேரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கஸ்டடி தான். தமிழ் ரசிகர்களுக்கு என்னை 15 வருடங்களாகத் தெரியும். இது என்னுடைய முதல் தெலுங்கு படம். தமிழ் இயக்குனருக்கு இங்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்காது. அது தான் எனக்கும் வேண்டும்.
கஸ்டடி சீரியஸான படம். வில்லன் சாகக் கூடாது என்பதை ஹீரோ உறுதி செய்ய வேண்டும் என்பது என்னுடைய யோசனை. வில்லன் சாகாமல் பாதுகாப்பதைத் தவிர ஹீரோவுக்கு வேறு வழியில்லை. இது அதிக ஆக்ஷன் கொண்ட ஒரு உணர்வு சார்ந்த படம். மொத்தப் படத்திலும் 2 காஸ்ட்யூம்கள்தான். 2 நாட்களில் கதை நடக்கும்.
நான் கதை சொன்ன ஒரே ஹீரோ நாக சைதன்யாதான். அதிர்ஷ்டவசமாக அவரே கதையை ஏற்றுக்கொண்டார். 100 நாட்களில் படப்பிடிப்பு நடந்தது. படத்தை இரண்டு மொழிகளிலும் படமாக்கினோம்.
படத்தில் கதாநாயகன் சிவனை விரும்புபவர். சிவா என்பதுதான் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு. இருப்பினும், சிவா என்ற பெயர் கடவுள் சார்ந்து இருப்பதாகக் கூறி சாய் நிராகரித்தார்.” என்று தெரிவித்துள்ளார்.