சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. அந்த வகையில் இவர் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இவரது இயக்கத்தில் உருவாகி இருந்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் சுந்தர். சி, வடிவேலுவை வைத்து கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் நயன்தாராவின் நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
அதாவது சுந்தர். சி அரண்மனை 4, மதகஜராஜா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நிலையில் அவருடைய இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கார்த்தி சுந்தர்.சியை சந்தித்து பேசி உள்ளாராம். அப்போது சுந்தர். சி, கார்த்தியிடம் கதை ஒன்றை சொல்ல அந்த கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். அடுத்தது இருவரின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இயக்குனர் சுந்தர். சி மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை முடித்த பின்னர் கார்த்தியின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.