கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான கார்த்தி கடைசியாக ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். மென்மையான திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இது தவிர சர்தார் 2, வா வாத்தியார் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. அதே சமயம் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தனது 29 வது படமான மார்ஷல் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்தி. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வடிவேலு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ஆதி வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ராமேஸ்வரத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். அடுத்தது இந்த படம் கடல் சம்பந்தமான கதைக்களத்தில் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.