தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தை இயக்கி பெயரையும் புகழையும் பெற்றார். அதைத்தொடர்ந்து ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல வெற்றி படங்களை கொடுத்து ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். சூர்யா இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு வருகின்ற மே 1ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரெட்ரோ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை முடித்த பிறகு சூர்யா என்னை தொடர்பு கொண்டு வேறு ஏதேனும் ஸ்கிரிப்ட் இருக்கிறதா? என்று கேட்டார். அப்போது என்னிடம் ரெட்ரோ கதை இருந்ததால் அதை சூர்யாவிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என்று சொன்னார். ரெட்ரோ என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும். திரும்பிப் பார்ப்பது என்ற வேறு அர்த்தமும் இதற்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -