பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் “லெஜண்ட்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஜேடி- ஜெர்ரி இப்படத்தை இயக்கியிருந்தனர். படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான செட்கள், இசை, ஒளிப்பதிவு,படத்தொகுப்பு என எல்லாமே தரமாக அமைந்திருந்தது. ஆனால் மிகவும் பழைய ஃபார்முலா கதையும், நடிகர் நடிகைகள் தேர்வும் பலவீனமாக அமைந்து படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. படம் வெளியான பின்பு லெஜன்ட் சரவணனின் மேக்கப் குறித்து பலரும் எதிர்மறையாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். பலர் இவரது நடிப்பில் ரஜினியின் சாயல் தெரிகிறது என்றும் கருத்துக்களைப் பதிவிட்டனர். இதைப்பற்றி லெஜன்ட் சரவணனிடமே கேட்டபோது ரஜினி தான் தன்னுடைய ரோல் மாடல் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் தாடி மீசையுடன் ஸ்டைலிஷான லுக்கில் வலம் வந்தார் லெஜண்ட் சரவணன். இந்த லுக்கில் சரவணன் இளமையாகத் தோற்றம் அளிப்பதாகவும் இது நிச்சயம் அடுத்த படத்திற்கான லுக்காகத் தான் இருக்கும் என்றும் பலர் கருதினர்.
இந்நிலையில்தான் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் தான் துரை செந்தில்குமார். இவருடைய படங்கள் காதல், ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்து இளைஞர்களைக் கவரும் வண்ணமே இருக்கும். அந்த வகையில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்கும் புதிய படமும் இளைஞர்களை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் அடுத்த கட்ட வேலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
- Advertisement -