கூலி திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கிட்டத்தட்ட 627 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்தது லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பல காரணங்களால் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் நடிகர் ரஜினி, ஓய்விற்கு பின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் இதனை உறுதி செய்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.