லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அடுத்தது கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இது தவிர தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்தடுத்த புதிய படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என சமீபத்தில் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதாவது ஏற்கனவே ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் எனும் ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் லோகேஷ். அதைத்தொடர்ந்து ஹீரோவாக வேண்டும் என்று திட்டமிட்ட லோகேஷ் முன்னணி, இயக்குனர் ஒருவருடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகிறாராம். கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன், இளையராஜாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தனுஷ், தற்போது ஏகப்பட்ட படங்களில் பிஸியாக இருப்பதால் இளையராஜாவின் பயோபிக் படம் தாமதம் ஆகிறது. எனவே இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம் அருண் மாதேஸ்வரன். இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.