தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவு தமிழகத்திற்கு மாபெரும் பேரிழப்பாகும். தன்னலமில்லாத பொதுநலவாதியாக வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்கு, அவரின் சமாதிக்குச் சென்று இன்று வரையிலும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் இரங்கல் தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், ரஜினி, கமல், சரத்குமார், சந்திரசேகர், ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் கேப்டன் விஜயகாந்தின் நினைவுகள் பற்றியும் அவரின் பெருமைகளை பற்றியும் மேடையில் பேசினர்.
அப்போது பேசிய மன்சூர் அலிகான், “நடிப்பின் இமயமாக எல்லோரின் மனதிலும் இருப்பவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். 15 கோடி தமிழர்களின் மனங்களில் குடியிருப்பவர். நான்கு வருடங்களுக்கு முன்பாகவே கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்தே நாங்கள் எல்லோரும் இறந்து விட்டோம். இத்தகைய மாமனிதருக்கு ஏன் இவ்வளவு சோதனை வந்தது என்பது எங்களுக்கு தெரியவில்லை. அதே நேரம் நடிகர்கள் அனைவருக்கும் மொய் விருந்து வைத்தாவது அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும். இதற்காக யாரிடமும் கடன் என்பதே வாங்க கூடாது. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த பொழுது நடிகர் சங்கம் ராணுவ பலத்தோடு இருந்தது மீண்டும் அதே போல வலுவாக நடிகர் சங்கத்தை கட்டமைக்க வேண்டும். மேலும் நடிகர் சங்க கட்டிடத்தில் ஒவ்வொரு பொங்கல் விழாவின்போதும் கேப்டன் விஜயகாந்தை நினைவு கூர்ந்து பொங்கல் விழா நடத்தப்பட வேண்டும்” என்றும் மேடையில் பரபரப்பாக பேசினார். மன்சூர் அலிகான் விஜயகாந்தின் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது மட்டுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். விஜயகாந்தின் இறப்பின் போது கூட அன்றைய நாள் முழுவதும் அவருடைய உடல் அருகிலேயே மன்சூர் அலிகான் இருந்ததை யாராலும் மறந்திருக்க முடியாது.
- Advertisement -