நடிகை நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் இந்தியிலும் கால் பதித்து வெற்றி பெற்றுள்ளார். அந்த வகையில் பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து மண்ணாங்கட்டி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதற்கிடையில் நடிகை நயன்தாரா, அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் நடிகை நயன்தாரா இந்த படத்திற்கு நோ சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமடைந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இது நயன்தாராவின் 81 வது படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தை நயன்தாரா தனது ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் யானை ஒன்றிற்கும் இளம் பெண்ணிற்கும் இடையிலான பாசப்பிணைப்பை கூறும் கதையாக உருவாக இருக்கிறதாம். இது சம்பந்தமான அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
துரை செந்தில்குமார் தற்போது சூரியின் கருடன் படத்தை முடித்துவிட்டு, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதை தொடர்ந்து நயன்தாராவின் புதிய படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
- Advertisement -