Homeசெய்திகள்சினிமாஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குளறுபடி... பணத்தை தானம் செய்யும் நிர்வாகம்...

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் குளறுபடி… பணத்தை தானம் செய்யும் நிர்வாகம்…

-

ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, பணத்தை தானம் செய்ய NORTHERN UNI நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய சினிமாவில் இசை உலகில் அசத்தும் இசை அமைப்பாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இசைக்கச்சேரிகள் நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி ஆகியோர் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் பிரபல பின்னணி பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஸ், தமன்னா, மிர்ச்சி சிவா, யோகி பாபு, சாண்டி, தொகுப்பாளினி டிடி, ரம்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை காண கட்டுக்கடங்காமல் மக்கள் கூடினர். அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், நடிகைகள் ரம்பா மற்றும் தமன்னாவை காண ஏராளமான ரசிகர்கள் முண்டியடித்துச் சென்றதால், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர். நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விசாரணை நடத்தவும் இலங்கை அரசும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் குளறுபடிகள் காரணமாக, கிடைத்த வருவாய் முழுவதையும் மீட்பு பணிகளுக்கும், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கும் கொடுக்க முடிவு செய்திருப்பதாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த NORTHERN UNI நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், நிகழ்ச்சியில் காயம் அடைந்தவர்கள் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

MUST READ