புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான
திரைப்படம் தான் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் முதல் பாகமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் சுகுமார், புஷ்பா தி ரூல் என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் உருவாகி வருவதால் ஆரம்பத்தில் இருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு நிறைவடையாத காரணத்தால் 2024 டிசம்பர் 6ம் தேதிக்கு புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், மீண்டும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் திரையிடப்படும் என்று புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தகவல் அல்லு அர்ஜுன் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.