ஐதராபாத்தில் உள்ள அரசு கல்லூரியில் புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இத்திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி இந்தியிலும் புஷ்பா திரைப்படம் சக்கைப்போடு போட்டது. படத்தில் சுனில், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அண்மையில் பெற்றார். படத்தின் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது.
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான ‘புஷ்பா தி ரூல்‘ படத்திலும் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த பகத் பாஸில் வில்லனாக நடிக்கிறார்.மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கடந்த மே மாதம் ஃபகத் ஃபாசில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையில் புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது. அங்கு அல்லு அர்ஜுன் பங்குபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.