நடிகை ருக்மிணி வசந்த், ஏஸ் படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
விஜய் சேதுபதியின் 51வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஏஸ். இந்த படத்தை ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி வித்யாசமான பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். யோகி பாபு லேடி கெட்டப்பில் நடித்திருக்கிறார். ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகின்ற மே 23ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ருக்மிணி வசந்த், “ஏஸ் படம் தான் என்னுடைய முதல் தமிழ் படம். எல்லோருக்கும் முதல் படம் என்றால் அது ஸ்பெஷலானது தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இது ஒரு காமெடியான குடும்பப்படம். எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். இதற்கு முன்பு சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதன்முறையாக காமெடி படத்தில் நடித்திருக்கிறேன். முதல் தமிழ் படம் என்பதால் வசனங்கள் பேசுவதற்கு சிரமமாக இருந்தது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.