சப்தம் பட இயக்குனர் அறிவழகன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இயக்குனர் அறிவழகன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஈரம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். அதைத் தொடர்ந்து இவர் குற்றம் 23 போன்ற வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். தற்போது இவர் மீண்டும் ஆதி நடிப்பில் சப்தம் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன், சிம்ரன், லைலா ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை 7 ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் இன்று (பிப்ரவரி 28) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் இப்படத்தின் இயக்குனர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மதிப்பிற்குரிய அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் வணக்கம். என்னுடைய இயக்கத்தில் சப்தம் திரைப்படம் வெளியாக இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த படம் சப்தத்தை மையமாக வைத்து சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. எனவே இதன் இசை, ஒலியமைப்பு ஆகியவை ஒரே நேரத்தில் பார்வையாளர்களுக்கு அசௌகரியத்தை கொடுக்காத வகையிலும் திகிலை உணர்த்தும் வகையிலும் டால்பி அட்மோஸ் 7.1, 5.1 என தனித்தனியே ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் திரைப்பட அனுபவம் என்பது பெரிய திரையில் நவீன தொழில்நுட்பத்துடன் பார்க்கும் போது தான் ஒரு முழுமையான அனுபவம் கிடைக்கும்.
ஆகையினால் திரையிடுவதற்கு முன்பாக ஒலிபெருக்கி, ஒலியமைப்பு கருவிகளை சரி பார்த்து இந்த படத்திற்கான ஒலி அளவினை 6 முதல் 6.5 என்று திரையரங்கு அளவு அமைப்புகளுக்கு ஏற்றவாறு வைக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சப்தம் படத்தின் திரையரங்க அனுபவித்தினை பார்வையாளர்கள் முழுவதுமாய் உணர உங்கள் ஒத்துழைப்பினை தாழ்மையுடன் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.