நடிகை சமந்தா மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை சமந்தா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் இவர் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் உடல்நலக்குறைவு காரணமாக சில வருடங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் தொடர்ந்து பல படங்களை பிசியாக நடிக்க தொடங்கி விட்டார். அந்த வகையில் ஏற்கனவே சிட்டாடல் தொடரில் நடித்திருந்த சமந்தா அடுத்தது என்ன படத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகை சமந்தா, தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது இயக்குனர் அட்லீ, ஜவான் படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி நடிகை சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.