இயக்குனர் சீனு ராமசாமி கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே, நீர் பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். மேலும் இவர் தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று படங்களுக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கான்வென்சன் சென்டரில் விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கல்வி விருது, ஊக்கத்தொகை போன்றவற்றை வழங்கினார்.

மேலும் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். படிப்பை தாண்டி சில நற்குணங்களையும் சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கினார்.
இதனை அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் திரை உலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்” கல்விக்கு ஊக்க கண் திறக்கும் ‘நண்பா ‘ இளைய தளபதி விஜய் உங்களை வாழ்த்துகிறேன்.
தங்கள் நடிப்பில் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ் சினிமாவிற்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் content based realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


